#படித்தால்_போதுமா?
தம்பதியினர் இடையே பிரிவு வருவதற்கு முக்கியமான காரணம் ஒருவருக்கொருவர் சிறிய குறைகளை பெரிதாக்குவதும், நன்மைகளை கவனிக்காமல் போவதுமே.
ராம் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து நண்பர்கள் 8 பேர் வீட்டுக்கு வருவதாகவும். இரவு உணவு சமைத்து வைக்குமாறும் சொன்னான். என்ன சமைக்க வேண்டும் என கேட்டதற்கு, சிலர் சோறு சாப்பிடுபவர்கள் சிலர் இரவு சப்பாத்தி சாப்பிடுவார்கள். எனவே, இரண்டையும சமைக்குமாறு சொன்னான்.
அவளும் மாலை முதலே சமைக்கத் தொடங்கி இரவு கணவனும் நண்பர்களும் வரும்போது உணவு தயார் செய்து வைத்திருந்தாள். சாப்பாட்டு மேசையில் அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு கணவன் அருகே சாப்பிட அமர்ந்தாள்.
ஒருவர் தனக்கு சுடுதண்ணீர் வேணும் என கேட்டார். எழுந்து தண்ணீர் சுடவைத்து வருவதற்குள் அனைவரும் உணவு உண்ண துவங்கி இருந்தார்கள். மீண்டும் சாப்பிட ஆரம்பித்ததும் மற்றொருவர் ரொட்டித் துண்டுகள் கிடைக்குமா எனக் கேட்டார். ரொட்டி டோஸ்ட் செய்து எடுத்து வந்து சாப்பிட அமரும் போது உணவு பாதிக்குமேல் காலியாயிருந்தது. ராம் மனைவியை பார்த்து அனைவருக்கும் கிரீன் டீ போட்டு எடுத்து வருமாறு சொன்னான். டீ போட்டு எடுத்து வருவதற்குள் உணவு முழுமையாக காலியாக இருந்தது.
டீ பருகிய வாரே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக கிளம்பி சென்றார்கள். அவளுக்கான உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். அனைவரும் சென்றதும் சமையலறைக்குள் கோபமாக வந்த ராம் வீட்டுல வர்றவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் முன்னே உங்க அம்மா சொல்லி வளர்க்கவில்லயா என கத்தினான்.
ஏன் என கேட்டாள். வீட்டுக்கு வருபவர்களை வாசல் வரை வழியனுப்பி வைக்க வேண்டியது வீட்டில் உள்ள பெண்களின் கடமை. "கிராமத்துக்காரி உனக்கு என்ன இங்கிதம் தெரியும்?" என மேலும் கத்தினான். இரவு உணவு உண்ணாமலேயே அழுதுகொண்டே படுக்கைக்கு சென்றாள்.
பெண்கள் உழைப்பை ஊதாசினப்படுத்துவது அவர்கள் உழைப்புச் திருடுவது ஆகும். தாய் சகோதரி மனைவி என யாராக இருந்தாலும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அவர்கள் செய்யும் உழைப்பை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. சமையல், வீடு சுத்தம் செய்வது, குழந்தை பெறுவது என்ற வேலைக்காக படைக்கப்பட்டவர்கள் அல்ல பெண்கள்.
நாம் அப்படி நினைப்பதால் அவர்களை பாராட்டவோ கனிவான வார்த்தைகளை பேசவோ தவறி விடுகிறோம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கவேண்டும் என்றால் அதை மகிழ்ச்சிக்குரியதாக நீங்கள் தான் மாற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் செய்யும் நன்மைகளையும் பாராட்டுவதும், வேலைகளில் சிறு உதவி செய்வது கூட உறவுகளை வலுப்படுத்தும்.

















